Thursday, December 8, 2011

உலகம்

உலகத்தை ஆட்டுவிப்பது
பணம் என்கிறான் வியாபாரி
பதவி என்கிறான் அரசியல்வாதி
அன்பு என்கிறான் நேசன்
கடவுள் என்கிறான் பக்தன்
விதி என்கிறான் சித்தன்
ஒன்று மட்டும் தெளிவாகிறது
ஆட்டுவிப்பது எதுவானாலும்
ஆடுபொருள் மனிதன் தான்.

பொறுப்பு

வெற்றிக்கு முழு காரணம்
நான் தான் என்று
கர்வம் கொள்ளும் மனிதன்
தோல்விக்கு காரணமாய் பொறுப்பேற்காமல்
நேரம் காலத்தை கூறுவதால்தான்
கோவில்களிலும் ஜோதிட நிலையங்களிலும்
கூட்டம் அலை மோதுகிறதோ ?

Wednesday, December 7, 2011

வேஷம்

அடிமைத்தனத்திற்கு எதிராக
ஆங்காரமாய் குரல்கொடுத்து
மக்களை அணைத்துக்கொண்டு
ஆறுதல்சொல்லி நடனமாடி
ஏற்றத்தாழ்வை ஒழிக்க
யோசனைகள் பலதந்து
உணர்வுமிக்க பாடலுக்கு
வாயசைத்து நடனமாடிவிட்டு
வீட்டிற்கு வந்ததும்
வேலைக்காரனை அடித்தான்
காரணம் எதுவுமின்றி.

Monday, November 21, 2011

விமர்சனம்

பத்திரிகை செய்திகளில்
தொலைக்காட்சி தொடர்களில்
திரைப்படங்களில்
வந்து கொண்டிருக்கும்
வன்முறைகளையும் , தகாதவைகளையும்
கூட பார்த்துக்கொண்டு
அமைதியாய் இருக்கும்
நடுத்தர வயதினர்
காதலை மட்டும்
கடுமையாய் விமர்சிக்க காரணம் ?
தன் குழந்தைக்கு
வந்துவிடக் கூடாது
என்ற எண்ணமோ !

Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரே

அனுமதி மறுத்தால் ஓடிவிட
ஜாதிக்கட்சி தலைவன்
என நினைத்தீரா ?

சிறையை பார்த்து
ஓடி பதுங்கும் சிறுபிள்ளை
என நினைத்தீரா ?

சிறைக்கு செல்வதை விளம்பரப்படுத்தும்
தரம்கெட்ட அரசியல்வாதி
என நினைத்தீரா ?

மத்திய அரசின் பூச்சாண்டி வேலையை
பார்த்து பயப்படும் மாநில அரசு
என நினைத்தீரா ?

திருடன் கையில் கொடுத்த சாவி போல்
அரசியல்வாதியின் கையில் கொடுத்த
லோக்பால் சட்டம்

கூர் மழுங்கும் என எதிர்பார்த்ததை விட
ஒருபடி மேலே போய்
தவறான ஊழல் புகாருக்கு
இரண்டு வருடம் சிறை தண்டனையாம்

கேட்ட மக்களுக்கே ரத்தம் கொதிக்கும் போது
வழிநடத்தும் தலைவர் வேடிக்கையா பார்ப்பார்

ஊழல் பெருச்சாளிகள் மிதக்கும் சாக்கடையில் (திகார் சிறை)
சற்றும் தளராமல் ஆரம்பித்த உண்ணாவிரதம்

முதல் இரு நாட்கள்
மக்களை திசைதிருப்ப
சில அமைச்சர்களின் ஊழல் (காமெடி) புகார்கள்
பகையாளியை பங்காளியாக்க
ஒரு சிறு முயற்சி

மக்கள் கூட்டம் பார்த்து மிரண்டு
வாய் மூடி நிற்பதை தவிர
வேறு வழி உண்டா ?

இதை விட்டால்
மீண்டும்
ஒரு சந்தர்ப்பம் வாய்க்காது.

மீண்டும் இந்தியா சுதந்திரம்
அடைய வேண்டும்
கொள்ளைகாரர்களிடம் இருந்து

Sunday, July 31, 2011

வாழ்வியல்

உடல்நிலை சரியில்லாத தந்தையை 
மருத்துவமனைக்கு கூட்டிசெல்லும் போது
அவர் நம்மை கூட்டிசென்ற 
நினைவுகள் பல கிளர்ந்து 
நம்மை தந்தையாய் பாவித்து 
அவரை குழந்தையாய் மாற்றி 
வாழ்வியல் யதார்த்தத்தை காட்டுகிறது  

Monday, July 25, 2011

சுவடுகள்

சாலையில் ஆங்காங்கே காணப்படும்
ஒழுங்கற்ற டயர் தடங்கள்
சில குடும்பங்களின் மகிழ்ச்சியை பறித்த
வாழ்க்கை பற்றிய அழியா சுவடுகளோ

Tuesday, July 19, 2011

நிதர்சனம்

ஓய்வில்லாத பணிகளுக்கு நடுவே
நேரம் அமைத்து யோசித்தாலும்
பதில் சொல்ல விளங்குவதில்லை
முதிர்ச்சியாய் கேள்விகேட்கும் பிள்ளை மனமும்
குழந்தையாய் கேள்விகேட்கும் பெற்றோர் மனமும்

Monday, June 13, 2011

மனசாட்சி

புத்தியின் அவமதிப்பையும் மீறி
சிலசமயம் மனசாட்சி அசைபோடுகிறது
செய்த தப்புகளையும்
கேட்காத மன்னிப்புகளையும்

Sunday, June 5, 2011

Facebook

சிந்தையில் மலர்ந்த எண்ணங்களையும்
நெஞ்சை நெகிழவைத்த புகைப்படங்களையும்
மனதை கவர்ந்த வீடியோக்களையும்
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போதும்
நண்பர்கள் பகிர்ந்ததை பார்க்கும்போதும்
அவர்களுடன் பயணித்த பசுமைநினைவுகளால்
மனதில் தோன்றும் எண்ணஅலைகளை
உடனுடக்குடன் பகிர்ந்து கொண்டு
வெளிப்படையாய் கருத்து சொல்லும்போது
குறைவது
தூர இடைவெளி மட்டுமல்ல
நட்பின் இடைவெளியும் தான்.

Saturday, June 4, 2011

உதவி

இசையை கேட்கும் ஆவலில்
புல்லாங்குழல் செய்ய
உதவி செய்கிறதோ
மரங்கொத்தி பறவை

Monday, May 30, 2011

வெள்ளித்திரை

ஆர்ப்பாட்டமான அறிமுக பாடல்
தேவையில்லாத அடுக்குமொழி வசனங்கள்
யதார்த்தத்தை மீறிய சண்டைகாட்சிகள்
இடையிடையே பாடலும் ஆடலும்
மிகப்பெரிய பேனரின் வெளியீடு
என வழக்கமான ஃபார்முலாவோடு
வெளிவரும் மசாலாபடங்களின் மத்தியில்
சத்தமில்லாமல் சாதித்து கொண்டிருக்கும்
நல்ல கதையம்சமுள்ள படங்கள்தான்
எங்களை திரையரங்குகளுக்குள் இழுக்கிறது

Sunday, May 29, 2011

வலி

வீட்டில் திருடியவனை அடிக்கும்போது
மனம் வலிக்கத்தான் செய்கிறது
நாட்டையே கொள்ளையடிக்கும் மந்திரிக்கு
வாகனக் கதவை திறந்துவிட்டு
மரியாதை செய்ததை நினைக்கையில்

Wednesday, May 25, 2011

முயற்சி

படிப்பில் முதல்மதிப்பெண் எடுத்தேன்
விளையாட்டில் முதல்மாணவனாக வந்தேன்
என் நண்பன் ஆச்சர்யப்பட்டான் 
அவனுக்கு தெரியபோவதில்லை 
என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 
தினமும் நடக்கும் சண்டையில் 
என்னை அவர்கள் கண்டுகொள்வதற்காக 
நான் செய்யும் பிரம்மப்பிரயத்தனம் என்று

Tuesday, May 24, 2011

ஊசல்

நண்பர்களுடன் போட்டியிட பட்டம் செய்து 
வானவில் கலவையில் வர்ணம் தீட்டி 
துடுப்பாக முழநீள வால் ஒட்டி
கைமாறாமலிருக்க நூலில் மாஞ்சா ஏற்றி 
காற்றுக்கேற்ப நுணுக்கமாய் பறக்க விடும்போது 
மனம் சிந்திக்க மறுக்கிறது 
காற்றில் பறக்கும் பட்டத்தின் நூலிழையில் 
ஏதோ ஒருஉயிரின் முடிவு ஊசலாடிக்கொண்டிருப்பதை... 

Monday, May 23, 2011

(ஒற்று)மை

மையிடப்பட்ட பேனாவும் விழிகளும்
மிகவும் தொல்லை தருகிறது
கவிதை படைத்து ரசிக்கச் சொல்லி

Thursday, May 19, 2011

விந்தை

ஜாதி பார்த்து கலக்கும்
திருமணப் பூச்சரத்தில் கூட
பிறர் அறியா வண்ணம்
சில காதல்பூக்கள் மொட்டவிழ்த்து
மணம் சேர்க்கத்தான் செய்கிறது.

Wednesday, May 18, 2011

சுழற்சி

சூரிய கதிரை வெப்பத் தூரிகையாக்கி
புவிநீரை தொய்த்து விண்ணில் தெளித்து
கரிய மேகங்களை சித்திரங்களாய் தீட்டி
மழையை பூமிக்கு கவிதையாய் பிரசவித்து
பசுமைத் தாவரங்களை பெருகிடச் செய்யும்
இயற்கை தாய்க்கு ஈடிணை உண்டோ !

Thursday, May 12, 2011

பதிவுகள்

கடல் அலைகளில் கால்நனைத்து
உன் மடியில் தலைவைத்து
ஓயாமல் பேசும் ஒலியலைகளை
என்மனம் தணிக்கை செய்தாலும்
சுகந்தமான வாசனையால் கிறங்கிப்போய்
தென்றல் தழுவிய உன்அருகாமையில்
காற்றில்படபடக்கும் காகிதமாய் உன்இமைகளும்
நாணத்தால் நிற்காமல்அசையும் கருவிழிகளும்
தலையாட்டல்களுக்கேற்ப அசையும் காதுதொங்கல்களும்
அழகாய் செதுக்கிவைத்த சிறுநாசியும்
இடைவிடாமல்பேசும் உதட்டின் சுழிப்புகளும்
காற்றசைவிற்கு நடனமாடும் கார்கூந்தலும்
ஆஸ்கார் விருது வாங்கிய
பேசும்படங்களாய் என் நினைவலைகளில்

Wednesday, May 11, 2011

புரிதல்

இரவு பகலாய் கண்விழித்து
காதல் கடிதம் தீட்டி
பயத்துடன் அவளிடம் கொடுத்தேன்
பிரித்து பார்த்துவிட்டு முழித்தாள்
அப்போது தான் புரிந்தது
என்உயிராய் நேசிக்கும் தமிழை
அவளுக்கு வாசிக்கவே தெரியாதென்று

தேடல்

இருவருக்கும் தெரிந்த
காதலை பரிமாறிக்கொள்ள
வார்த்தைகளை தேடுகிறோம்
இன்னும் அகப்படவில்லை
நம்முடைய காதலின்
திரையாய் மௌனம்
நம்மைப்பார்த்து சிரித்தபடி

Tuesday, May 10, 2011

அதிர்ஷ்டம்

மழைக்கு யோகம்
குடை எடுத்துவராத
அவள்மீது விழுந்து
அடைந்தது மோட்சம்

Sunday, May 8, 2011

அன்னையர் தினம்

என் கண் பார்த்து
மன ஓட்டங்களை படிப்பாள்
தொலை தூரத்தில் இருந்தாலும்
என்குரல் மூலம் நலமறிவாள்
எனக்காக பல செய்வாள்
என்னிடம் எதுவும் எதிர்பார்த்ததில்லை
நான் உண்பதை பார்த்து
அவள் பசி மறப்பாள்
மலையளவு பிரச்சினை வந்தாலும்
வெற்றிபெற தைரியம் கொடுப்பாள்
அடுத்த ஜென்மம் இருந்தாலும்
உன்மகனாக பிறக்கவே ஆசை
இப்பிறவியில் உன்மகனாக பிறக்க
முன்பிறவியில் என்னதவம் செய்தேனோ
எந்த பதவியில் இருந்தாலும்
குபேர வாழ்க்கையே வாழ்ந்தாலும்
உன் காலடியே என்சொர்க்கம்
அன்னையே நடமாடும் தெய்வமே
அன்னையர் தினமான இன்றும்
என்றும் உனை மறவேன்

Saturday, May 7, 2011

தாயுள்ளம்

முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாய்
கோயிலுக்கு சென்று பிரார்தனை செய்தாள்
தன்னை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வேண்டும்
என்பதற்காக அல்ல
இல்லத்தில் விட்டுவிட்டோமே என்று தன்மகன்
வருத்தப்படக்கூடாது என்பதற்காக

ஐயம்

சாலையோர மரங்களை வெட்டுவதாலா இடித்த நிறுத்த வழியில்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

Thursday, May 5, 2011

வேற்றுமையில் ஒற்றுமை

நாத்திகனின் எண்ணங்கள்
ஆத்திகனிலிருந்து வேறுபட்டாலும்
யோசிப்பது என்னவோ
கடவுளை பற்றித்தான்.

மனிதம்

ஒவ்வொரு முறை
ஆம்புலன்ஸ் அலறும்போதும்
நாத்திகம் பேசாமல்
மனம் வேண்டுகிறது
முகம்தெரியாத உயிருக்காக

Wednesday, May 4, 2011

Monday, May 2, 2011

உறுதி மொழி

பந்தயதிற்காக ஒருநாள்
பட்டினி கிடந்தேன்
அன்றிலிருந்து விட்டுவிட்டேன்
உணவை வீணாக்குவதை

காலத்தின் தீர்ப்பு !

நீதி தவறிய கொடுங்கோலராய் மகன்
தவறாக தண்டிக்கப்பட்ட அப்பாவி கைதியாய் தந்தை
மரண சாசனத்தில் இடப்பட்ட கையொப்பம்
கீழுலகத்தில் இருந்து மேலுலகத்திற்கு அல்ல
இல்லத்தில் இருந்து முதியோர் இல்லத்திற்கு
ஆனால் மகனை தந்தையாக்கி முடிவு
தந்தது காலம்.

பாசம்

முத்தம் கொடுத்துக் கொஞ்ச கூட
உடலில் தெம்பு இல்லை
இருந்த உணவை குழந்தைக்குக் கொடுத்துவிட்டு
பசியுடன் பெற்றோர்கள்.

Sunday, May 1, 2011

மே தினம்

வியாபார மயமான உலகம்
பணத்தை துரத்தும் மனிதர்கள்
இவற்றின் மத்தியில்
உழைப்பால் உயர்ந்தோர்கள் அதிகம்
உங்கள் சிந்தையில் நுணுக்கமும்
செயலில் சீரிய வேகமும்
அதிக ஈடுபாட்டுடன் உழைத்து
வாழ்வில் மேலும் உயர்ந்திட
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

Thursday, April 21, 2011

ஞானம்

கண் எதிரே
சமபல எதிரணியுடன்
தன்படை தோற்று
கோப்பையை இழந்து
கதிகலங்கி நிற்கும்போது
புத்தியில் தோன்றியிருக்குமோ
ஆதரவற்ற அப்பாவிகளை
கொன்று குவித்தது
வெற்றியே அல்ல
ஈனச்செயல் என்று.

Tuesday, March 15, 2011

சுனாமி

ஏழை பணக்காரன்
ஏற்றத்தாழ்வை நீக்க
இயற்கை விளையாடும்
கோர விளையாட்டோ !