Thursday, December 8, 2011

உலகம்

உலகத்தை ஆட்டுவிப்பது
பணம் என்கிறான் வியாபாரி
பதவி என்கிறான் அரசியல்வாதி
அன்பு என்கிறான் நேசன்
கடவுள் என்கிறான் பக்தன்
விதி என்கிறான் சித்தன்
ஒன்று மட்டும் தெளிவாகிறது
ஆட்டுவிப்பது எதுவானாலும்
ஆடுபொருள் மனிதன் தான்.

பொறுப்பு

வெற்றிக்கு முழு காரணம்
நான் தான் என்று
கர்வம் கொள்ளும் மனிதன்
தோல்விக்கு காரணமாய் பொறுப்பேற்காமல்
நேரம் காலத்தை கூறுவதால்தான்
கோவில்களிலும் ஜோதிட நிலையங்களிலும்
கூட்டம் அலை மோதுகிறதோ ?

Wednesday, December 7, 2011

வேஷம்

அடிமைத்தனத்திற்கு எதிராக
ஆங்காரமாய் குரல்கொடுத்து
மக்களை அணைத்துக்கொண்டு
ஆறுதல்சொல்லி நடனமாடி
ஏற்றத்தாழ்வை ஒழிக்க
யோசனைகள் பலதந்து
உணர்வுமிக்க பாடலுக்கு
வாயசைத்து நடனமாடிவிட்டு
வீட்டிற்கு வந்ததும்
வேலைக்காரனை அடித்தான்
காரணம் எதுவுமின்றி.